மூலக்கதை (சிங்களம்) – மஞ்சுள வெடிவர்த்தன.
ஆங்கிலத்தில் – றண்பண்டா செனவிரத்ன
தமிழில் – மு.மயூரன்
மரியாவின் கன்னிமையை அழித்துவிட்ட எம் புணர்ச்சி இப்பொழுதுதான் முடிவுற்றது.
தொடர்ந்தும் அவள்மீது படுத்தேயிருந்தேன்.
வியர்வையின் ஈரத்தில் எம்மிருவர் உடல்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கிடந்தன.
அவளது யோனித்துவாரத்தினுள்ளிருந்து நழுவிக்கொண்டிருந்தது என் ஆண்குறி.
சூடாய் வெளியேறும் சுவாசத்தினால் என் வியர்வையின் ஈரத்தை உலர்த்திக்கொண்டிருந்தாள்.
ஒருமுறை கட்டிலில் முழங்கால்களை ஊன்றி கால்களை மடித்து என் மீது குந்தியிருந்தவண்ணம் மரியா முனகத்தொடங்கினாள்.
முகத்தைத் திருப்பிக்கொண்டேன். கண்கள் மூடிக்கொண்டன. இருள் என்னைச் சூழலாயிற்று.
—
ரோம்நகரம். Pharao காலம்.
ஒரு சிறைச்சாலையில் என்னுடல் வைப்பிடப்பட்டிருந்தது. நான்கு பாரிய கற்சுவர்களினால் சூழப்பட்ட அந்த மட்டுமட்டான இடத்தினுள் மூர்ச்சையின் வெவ்வேறு நிலைகளில் ஏறத்தாழ இருபது கைதிகள் வரை இருந்தனர்.
ஓரிடத்தில் சுவாசத்தொகுதி பலவீனமடைந்திருந்த ஒருவரின் ஓலம்.
மற்றோரிடத்தில் “யெகோவா” வை நோக்கிய “பா…பா..” தொழுகை ஓசை.
பிறிதோரிடத்தில் வீணீர் வடித்தபடி ஒருவர்.
இருந்தாற்போல் ஒரு முனகல் சத்தம் எழும்.
பின் மெல்ல மெல்ல அவ்வொலி கரைந்து மறையும்.
இவ்வொலிகளின் கலவையைக் கவனித்தவாறே இடதுபுறச்சுவரின் மேற்பகுதியிலிருந்த சிறு துவாரத்தில் என் பார்வையை நிலைப்படுத்தியிருந்தேன்.
அதனூடு சூரிய வெளிச்சம் மெல்ல மெல்லக் கசிந்துகொண்டிருந்தது.
இருளில் கலங்கியிருந்த என் கண்கள், அச்சிற்றொளிப் பொட்டின் கட்டுக்குள் அயரலாயிற்று.
அப்போதுதான் அவ்விசித்திரமான கனவு பிறந்தது.
முகில்களற்ற இரவின் வெறுவான வெளியெங்கும் தாரகைகள் மினுங்கிக்கொண்டிருந்தன.
திடீரென அப்பெருங்கூட்டத்தினின்று பிரிந்து சிதறிய தனித் தாரகையொன்று என் கவனதை ஈர்க்கத்தொடங்கியது.
அது நிலாவினை அண்மித்தபோது வால் ஒன்றை உருவாக்கிற்று. அவ்வால் நீண்டு வளர்ந்து செல்லலாயிற்று. அந்நீள்வாலின் நுனி ஒரு சுருக்குக் கயிறாக மாறி என் கழுத்தில் விழுந்து மெல்ல இறுக்கத்துவங்கிற்று.
மரணபயத்தில் என்னால் முடிந்தமட்டும் அலறத்தொடங்கினேன்.
ஆனால் எச்சிறு ஓசையும் என் வாயுள்ளிருந்து வெளிவரவில்லை.
தலைமீது பட்ட ஒரு கைதியின் பாதத் தொடுகையில் என் கண்கள் திறந்தன.
இன்னமும் கழுத்தை என் கைகளால் பிசைந்தபடி மௌனமாக அலறிக்கொண்டிருந்தேன்.
ஒளியின் ஊசிக்கதிர்கள் சுவர்த்துவாரத்தினூடு ஒழுகிக்கொண்டிருந்தன.
அச்சிறைக்கூடத்தின் ஒவ்வொரு பொருளையும் தொட்டு நகர்ந்தவாறிருந்தது வெளிச்சம்.
அக்கைதிகளிடையே ஒரு தலைவன் இருந்தான். மிடுக்கான இளைஞன். கனவுகளுக்கு விளக்கம் சொல்வதில் பிரபலமானவன்.
டோனார்த் எனுமிடத்தில் இரிபது லியூக்கர்களுக்காக சகோதரர்கள் அவனை விற்றுவிட்டதால் ஜோசப் எகிப்துக்கு வரும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டான்.
வாயிற்காப்போனும் மன்னன் “ஃபாரோ” வின் முதன்மைப் பாதுகாவலனுமாகிய “போதியர்” இன் மனைவியினுடைய ‘கற்பை’ களங்கப்படுத்தியதன்மூலம் அவன் பெரிய முட்டாள்த்தனத்தைச் செய்தான். அவளோடு பாலுறவு கொண்டமைக்காகச் சிறையிலடைக்கப்பட்டான்.
தானிருந்த இடத்திலிருந்து எழுந்துவந்து கம்பீரமாக என்முன் நின்று ஆழ்ந்த, மிடுக்கான குரலில் எனை விளித்தான் ஜோசப்.
“உன் கனவைத் தெளிவாய் விபரி, அதன் விளக்கத்தை நான் கூறுகிறேன்”
நடுங்கும் குரலில் என் கனவை அவனிடம் ஒப்பித்தேன்.
கண்களை மூடி அமைதியாய்ச் சில கணங்கள் தன் கைகளை உயர்த்தி வைத்துப் பின் தாழ்த்தினான்.
கண்களைத் திறந்து பேசத்தொடங்கினான்.
“உன் மூலம் ஓர் ஆண் குழந்தை பிறக்கவிருக்கிறது. மிக நிச்சயமாய் அவன் நாத்திகத்தின் உச்சத்திற்குப் போவான். அவன் எதிர்க் க்றிஸ்து”
கைதிகளின் இதய ஆழத்துள்ளிருந்த உணர்ச்சிகளின் கலப்பு அவர்கள் முகத்தைச் சாயமிட்டது.
தத்தம் இடங்களிலிருந்து கால்களை உயர்த்தினர்.
“முதலில் அவன் உன் மரணமாயிருப்பான். பின் மற்றவர்களிடத்தும் பயங்கரத்தைப் பரப்புவான். யாரும், எத்தகு முயற்சியாலும் அவனுடைய பிறப்பைத் தடுத்துவிட முடியாது”.
அமைதியான குரலில் கனவை விபரித்து முடித்தான் ஜோசப்.
இவன்சொன்ன தகவல்களை கேட்டுவிட்டு எல்லாக் கைதிகளும் எழுந்தனர்.
என்னைச்சுற்றி வட்டமிடத்தொடங்கினர்.
நான் அதிர்ச்சியுற்றேன்.
என் பிரக்ஞை பயத்துள் அமிழ்ந்தது.
மெதுவாய் ஆண்டவரை அழைத்தேன்.
மெல்ல அம்மனித வட்டம் சுருங்கத்தொடங்கியது.
அனைவர் பார்வைகளும் என் ஆண்குறி மீது திரும்பின.
எல்லோரும் ஒரே அசைவில் என் மீது குறி வைத்துத் தாக்கத்தொடங்கினர்.
தோளோடு தோள் பொருதத்தொடங்கினர்.
எனது ஆண்குறியைத் தொடுவதற்காகவோ அல்லது பிடுங்கி எறிவதற்காகவோ பயங்கரப் போராட்டம் விளைந்தது.
தரைமீது வீழ்ந்து போராடினேன்.
அந்நேர இடைவெளியில் அவர்களுக்குபின்னாலிருந்து யாரோ வந்து என் கால்களுக்கிடையே கைவைத்து ஆண்குறியைப் பற்றி இறுக்கினான்.
நான் மண்புழுவென நெளியவாரம்பித்தேன்.
முடிந்தமட்டும் அலறினேன்.
இவ்வலறல் ஓலமும் போராட்டமும் தொடர்ந்தவண்ணமேயிருந்தது – என் தலை கட்டில் தலைமாட்டில் மோதும்வரை.
என் கைகள் என் ஆண்குறியை நன்கு இறுக்கிப் பற்றியிருந்தது.
—
மரியா தொழுகைப்பீடத்திற்கு முன்னால் முழு நிர்வாணமாக முழந்தாளிட்டு நின்றிருந்தாள்.
‘கன்னி மேரியின்’ அருள்நிறைந்த பார்வை, அளவற்ற அனுதாபத்துடனும் கட்டற்ற கருணையுடனும் நிலைத்திருந்தது.
மரியாவுக்கான ஒரு துளிக் கண்ணீர் கன்னிமேரியின் கண்களில் துளிர்த்தது.
மென்நீல – வெண்மை நிற களிமண் சிலை மீது வழிந்து உருண்டது.
மரிய இவை எதனையும் காணவில்லை.
அவள் பார்வையாலும் விரல்களாலும் தரையைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
அவளது கூந்தல் ஒற்றை அலையாய் முதுகில் வழிந்து பிட்டங்களின் நடுப்பகுதிரை ஊடறுத்து நீண்டு கிடந்தது.
அவளின் மெல்லிடை, கவர்ச்சிகரமான இடுப்பை எடுப்பாய்க் காட்டிற்று.
அவள்மீது பார்வையைப் படரவிட்டு கட்டில் தலைமாட்டில் சாய்ந்தவாறே சிகரெற் ஒன்றைப் பற்றவைத்து நீண்டடர்ந்த புகைப்படலத்தால் என் நுரையீரலை நிரப்பினேன்.
என் தோள் மீது யாரோ தட்டுவதாய் உணர்ந்து திரும்பினேன்.
நீண்ட கரும் மயிர்களால் மூடப்பட்ட உடல். சாத்தான்.
அவனுடலை மூடியிருந்த ஒரேயொரு துணிப்பொருள் ஜட்டி மட்டுமே.
மெல்லிய பொல் ஒன்றை தன் கையில் இறுக்கிப் பற்றியிருந்தான். நெருப்புக் கேட்டான். என் சிகரெற்றை எடுத்துக்கொடுத்தேன். தன் பொல்லைப் பற்றவைத்தான்.
சிகரெற்றைத் திருப்பித் தந்துவிட்டு மரியாவுக்கு அருகிலிருந்த சாய்மனைக்கதிரையில் சாய்ந்தபடியே என்னை நோக்கித் திரும்பினான்.
தோழமையோடு பல் தெரியப் புன்னகைத்தான்.
என் எண்ணங்கள் நகரத்தொடங்கின.
பார்வையை விலக்கி மேலே பேர்த்தேன்.
கூரையின்மீது ஓடு பிரிக்கப்படும் ஓசை கேட்டது.
இரண்டு கைகள் ஓடுகளைக் கழற்றிக்கொண்டிருந்தன.
கூரையின் துவாரத்தினூடு தூயவெண் சிறகுகளை விரித்தபடி ஒரு புனிதத் திருவுரு தோன்றிற்று.
அதன் உடல் முழுதும் பனிவெண் இறகுகளால் மூடப்பட்டிருந்தது.
சிறகுகளைப் பென்குவின் போல மடித்து வைத்துக்கொண்டு மரியாவின் நிர்வாண உடலின் முன்னால் நிதானித்து நின்றது.
நான் அதனை மிக இலகுவாக தேவதூதன் கப்ரியலாக இனங்கண்டுகொண்டேன்.
ஒளியின் தேவதைகளுக்கும் இருளின் சக்திகளுக்கும் இடையிலான தெய்வீகப்போர் எனக்கு மெல்லப் புலப்படலாயிற்று.
சாய்மனைக் கதிரையில் சாய்வில் தலைகீழாய் நின்றுகொண்டான் சாத்தான்.
தன் உரத்த பெருங்குரலின் இடிக்கூச்சலினால் மரியாவை விளித்து,
“என்னரும் மரியாவே, பெண்களுள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, நான் உம்மீது பிரியமாயிருக்கிறேன். என் முழு இதயத்தினதும் கட்டற்ற ஆசிகள் உமகே. ஆசீர்வதிக்கப்பட்ட உம் திருவயிற்றின் கனியாகிய நிகரற்ற பலம் பொருந்திய இப்படைப்பு ‘எதிர்க்க்றிஸ்து’ எனப் பெயர் பெறக்கடவது! ஏனெனில் இவ்வவவதாரபுருஷ, உலகினை அறத்தின் உயர்நிலைக்கு எடுத்துச்செல்லுவார். உலக மகக்ளை ரட்சிப்பார்!”
இனிய புன்னகை தவழும் முகத்துடன் சாத்தான் மீண்டும் அமர்ந்தான்.
மரியா மூர்ச்சித்து விழுந்தாள்.
என்னால் அவளருகில் செல்ல முடியவில்லை.
நான் கட்டிலோடு உறைந்துவிட்டிருந்தேன்.
தன் இறகுப் புதரினுள் கையை நுழைத்த கப்ரியல் ஒரு குடுவையை வெளியில் எடுத்து மரியாவின் முகத்தில் நீர் தெளித்தான்.
அவள் விழிகள் நர்த்தித்தன.
கண் விழித்துச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
திடீரென கப்ரியலின் மடியிற்குத் தாவியவளாய் முனகலாய் கேட்டாள்,
“ஓ! மாண்புமிகு கப்ரியல்!
கடவுளுக்கு மிகவும் விசுவாசமானவர்களும் இந்தப் பாழுங்கிணற்றில் தள்ளப்படுவது ஏன்?”
இதுவரையில்லா இனம்புரியாத உணர்ச்சிகளுடன் மரியாவை மடியில் வைத்திருந்த கப்ரியலின் முகம் சிவக்கலாயிற்று.
அவன் ஆழ்ந்த குழப்பத்துக்குள்ளாகியிருந்தான்.
என் நிர்வாண உடல் சற்று வியர்வை குளித்தது.
உதடுகள், வாய், தொண்டை எல்லாம் வெடிப்புறுவதை நான் உணர்ந்தேன்.
திடீரென முன்னால் பாய்ந்து கப்ரியலை நிலத்தில் தள்ளி வீழ்த்தினான் சாத்தான்.
பற்றியெரியும் கோபத்துடன் கப்ரியல் சாத்தான் மீது பாய்ந்தான்.
“தெய்வீகப்போர்” வெடித்தது.
இருவரும் ஒற்றைக் கட்டாய் உருண்டார்கள்.
சாத்தான், கபிரியலின் கால்களை வாயுள் திணித்து, முறுக்கிச், சப்பி, விழுங்கினான்.
வாயுள்ளிருந்து குருதி வழிந்தது. கப்ரியல் வெறி பிடித்தவனாய் சாத்தானின் கால்களை மென்று விழுங்கினான்.
இப்படியாக ஒருவரை ஒருவர் கடித்துப் புசித்து ஈற்றில் புலப்படாமல் மறைந்தே போனார்கள்.
—
“மரியா” என இங்கு அழைக்கப்பட்ட போதிலும் அவளின் உண்மையான பெயர், “மேரி ஜசிந்தா டீ சில்வா” என்பதாகும்.
திருமணமாவதற்கு முன்பான அவள் பெயரின் “ஹாமர்” நீக்கப்பட்டு கணவன் பெயரான “ஜோசம் டீ சில்வா” வின் “டீ சில்வா” சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரின் பனிக்குளிரில் “Lady Garbus” தேவாலயத்தின் பின்புறமாகவுள்ள வாங்கில் சாய்ந்திருந்தவண்ணம் தோழிக்காகக் காத்திருந்தபோதே அவளை முதன்முதலில் பார்த்தேன்.
வெள்ளிக்கிழமை.
அதிக சன நெரிசலற்ற நேரமாக இருந்தமையால் மரியாவின் நீண்ட மன்றாட்டம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அவளின் பின்னே முழந்தாளிட்டு நின்ற பெண் அவளது மாமியார் என்று பின்னர் அறிந்துகொண்டேன்.
அவள் மன்றாட்டம் முடிந்து எழுந்தாள்.
அப்பாவித்தனமான அந்த முகம் முக்காடிடப்பட்டிருந்தது.
எவ்வாறு மாதாவின் பாதங்களை மும்முறை தொட்டு முத்தமிடுகின்றாள் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
பிறகு தன் மாமியாரின் பக்கம் திரும்பாமலேயே தேவாலயத்தின் வாசலை நோக்கி நடந்தாள்.
டிசம்பர் காற்று, அவள் முக்காட்டினைக் காவிவந்து என் காலடியில் போட்டுச் சென்றது.
அவள் காற்றைச் சினந்துகொண்டு வரும் போது திருப்பிக் கொடுப்பதற்காக குனிந்து அதைக் கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தேன்.
அதுதான் எம் கண்கள் சந்தித்துக்கொண்ட முதல்முறை.
அவள் திருமணம் செய்துகொண்டு இப்பொழுது இரண்டு ஆண்டுகளாகிறது. இன்னமும் கன்னியாகத்தான் இருக்கிறாள்.
ஜோசப்பின் பாலியல் இயலுகைகள் பற்றிய உண்மைகளை கவனிக்கத்தவறிய அனைவரும் இவளை மலடியாகவே பார்த்தனர்.
கர்த்தர் மீது மிகுந்த பக்தி கொண்டவளாக இருந்தமையால் இத்தகு அவமானங்கள் பற்றி அவள் சிரத்தை எடுக்கவில்லை.
தொடர்ந்தும் வாழ்வதற்கான உறுதியுடையவளாயிருந்தாள்.
மாமியார் அவளை தேவாலயத்துக்கு அழைத்துவந்திருக்கும் சந்தர்ப்பத்திலும் கூட ஜோசப்பின் இயலாமைகளைக் காட்டிக் கொடுக்காமல் மெய்யான அண்டவரின் குழந்தை போல் எல்லாத் துன்பங்களையும் தாங்கிக்கொண்டாள்.
அவளது உயிரின் இருப்பு, ஆத்மார்த்தமாக ஆண்டவர் மீதான விசுவாசத்திலும் கர்த்தரின் வார்த்தைகளிலுமே கட்டுண்டிருந்தது.
அவளது கணவன் ஜோசப்பிற்கு இந்த உலகத்தில் கர்த்தரைத்தவிர வேறு எதுவும் கிடையாது.
அவனது உண்ணலும் குடித்தலும் எல்லாச்செயல்களும் கர்த்தரை நோக்கிய மன்றாட்டத்துடனேயே ஆரம்பிக்கும் என்று அவள் சொல்லிக்கொள்வாள்.
அவள் அவ்வாறு சொல்லியிருக்கக்கூடும் தான்.
ஏனெனில் “திருமணத்தின் பின் ஆணும் பெண்ணும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்பது கர்த்தருடைய வார்த்தை.
ஜோசப் மரியாவின் ஆழ்ந்த காதலை உள்வாங்கிக்கொண்டிருக்கிறான். அதில் சில உண்மைகள் இருக்கக்கூடும்.
அவளது இத்தகு அர்ப்பணிப்பை யாரால் தட்டிக்கழித்துவிட முடியும்?
அதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், கர்த்தரின் வார்த்தையைத் தட்டிக்கழித்தல் பெரும் பாவமாகும்.
நானும் அவள் அர்ப்பணிப்பை மதிக்கின்றேன்.
நானும் அவள் காதலுக்கு இடமளித்தேன்.
அழகிய அவள் உடலைக் காதலித்தேன்.
நான் அழகிய அவள் உடலைக் காதலித்தேன்.
அப்போதிருந்து மேரி ஜசிந்தாவை நான் மரியா என அழைக்கலானேன்.
நீண்ட நாட்கள் கழிந்தபின் பிறகு எமக்கு அந்தத் தினம் – சுதந்திர நாள் – கைப்பட்டது.
ஒருவன் எதிர்பாராதவிதமாகத்தான் அந்தப் பரவசமூட்டும் வாய்ப்பைப்பெறுவான்.
அதிர்ஷ்டவசமாக நான் அந்த வாய்ப்பைப் பெற்றவனானேன்.
சொர்க்கத்தின் முழுமையும் என் முன்னே விரிந்தது.
—
இருவரும் அவளது வீட்டிலிருந்தோம்.
அவள் என்மேல் படர்வதற்கிடையில் என்மீது பரவசம் படர்ந்தது.
முதலில் என் முகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் வெறி பிடித்தவள் போல் முடிவிலி முத்தங்களைப் பதிக்கத்தொடங்கினாள்.
கொந்தளித்து மூச்சிரைத்துக் கொண்டிருந்தவளை என்னருகில் இழுத்துக் கட்டிலில் உட்காரவைத்து மெதுவாய்க் காதோரம் முணுமுணுத்தேன்.
“இண்டைய நாள எப்பவும் மறக்கேலாத நாளாக்கிறதெண்டா நீ இந்த நிபந்தனைக்கு உடன்படத்தான் வேணும். பயப்பிடாத!… வெக்கப்படாத! இத கர்த்தர் கூட ஒண்டுமே சொல்லாம அனுமதிப்பேர்”
அவள் தனது வலது கையை என் இடுப்பைச் சுற்றி இறுக்கி என் தோள் மீது தலை சாய்த்தாள்.
அவளுள் முட்டிமோதும் விரகதாப மூச்சின் ஓசையை நான் கேட்டேன்.
“இப்ப இருந்து இண்டைக்கு முழுக்க நாங்க உடுப்பே இல்லாம இருக்கோணும் சரியா?”
பரபரப்படைந்தவளாய்த் திருப்பிக் கேட்டாள்
“முழு நாளுமா? சாப்பிடக் குடிக்கக்குள்ளயும் கூடவா?”
“ம்.. எல்லாத்துக்கும் முதல் எனக்கு இப்ப ஒரு கோப்பை தேத்தண்ணி வேணும். அது கூட என் நிபந்தனைப்படிதான்.”
இந்த யோசனையைக் கேட்டு, இந்த எதிர்பாராத ஒப்பந்தத்தால் மரியா மிகவும் குழப்பமுற்றாள்.
நான் அவளைச் சமாதானப்படுத்த முயன்றேன்.
“இந்த உலகத்தில யார உனக்கு ரொம்பப்பிடிக்கும்?”
மௌனமாயிருந்து என்னைப் படித்தாள்.
சில நிமிஷங்களுக்குப்பிறகு குழப்பம் களைந்து சொன்னாள்,
“நீங்கதான்”
“இல்ல நீ ஆண்டவரத்தான் ரொம்ப ரொம்ப விரும்பிறாய்”
நான் மெல்ல மெல்ல அவளை என் ஒப்பந்தத்தின் இறுதிக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முயன்றேன்.
“மரபுக்கு எதிரான இந்த உட்டுப்புக்களை கர்த்தர் விரும்ப மாட்டேர். அதாலதான் மனிசர உடுப்பில்லாம படைச்சேர். அதாலதான் தானும் உடுப்பில்லாம இருந்தேர்.
நிர்வாணம் தான் அவருக்குப் பிடிக்கும். எண்டபடியா நாங்களும் நிர்வாணத்த மதிக்கோணும். அவரத் திருப்திப்படுத்திறதெண்டா நாங்க இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டாகோணும். ”
இவ்வாறு பேசிக்கொண்டே அவள் கண்களை ஆராய்ந்தவண்ணம் அவளது ஆடைகளைக் களைந்தேன்.
ஒரு முயல் குட்டியைப்போல எல்லாவற்றுக்கும் பணிந்துபோனாள்.
வெட்கத்தில் சிவக்கலானாள்.
இறுதியில் மரியாவின் தேவதை நிகர்த்த அழகு என் பார்வையின் முன்னே முகிழ்ந்தது.
மரியா நிர்வாணமாயிருக்கவும் பழகிக்கொண்டாள்.
அம்மணமாய் சமையலறையினுள் நடந்து போகும்போது கூட அவளிதயம் மலர்ந்தது.
என் ஆடைகளையும் களைந்தவனாய் சிகரெற் ஒன்றினைப் பற்றவைத்துவிட்டுக் கட்டில் தலைமாட்டில் சாய்ந்தேன்.
சற்றைக்கெல்லாம் ஒரு தட்டில் தேநீர்க்கோப்பையை எடுத்துக்கொண்டு அறையினுள் வந்தாள்.
என் புன்னகைக்கும் கண்கள் அவள் உடலழகில் தோய்ந்தது.
தேநீரை மேசை மீது வைத்துவிட்டு திடீரென கட்டிலில் பாய்ந்து என் ஆண்குறியை அழுத்திக்கொண்டிருந்த தலையணையை உருவி என்மீது விட்டெறிந்தாள்.
சிரிப்பலைகள் சிதறிக் காற்றில் எதிரொலித்தது.
சிரிப்பின் கடலினுள் அவ்வறை மூழ்கி அமிழ்ந்து அடங்கிப்போயிற்று.
கட்டிலிலிருந்து இறங்கி நடந்து அவளருகில் போனேன்.
என்னிரு கைகளாலும் அவளை அள்ளிக் கவனமாய்க் கட்டிலில் போட்டேன்.
—
“இப்ப என்ன செய்யிறது?”
புன்னகைக்க முயற்சித்தவளாய் மரியா கேட்டாள்.
“நான் உண்டாகிட்டனெண்டால் ஜோசப்புக்கு தெரிஞ்சிரும்”
அவளுள்ளிருந்த பயம், பூரித்த சந்தோஷத்தால் துண்டுபடலானது.
உட்கார்ந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.
மரியா வார்த்தைகள் இன்றி, தன் கண்களை என் கண்களில் நிலைப்படுத்திக் கண்களாலேயே என் பதிலை யாசித்தாள்.
“ஜோசப்பிட்ட சொல்லிடு, இந்தக் குழந்தைய
கர்த்தர் குடுத்தேர் எண்டு!”
_________
